Sunday 3 May 2020

கொரோனா காலத்தில் பின்னோட்டம்; ரயில்கள்

முடிவில் நம் மனதில் நிற்பது நமது எதிரிகள் பேசிய வார்த்தைகள் அல்ல; நம் நண்பர்களின் மௌனம்தான் என்று மார்டின் லூதர் கிங் சொல்லுவார். அது சில சமயங்களில் நமக்கும் மிக அழகாய் பொருந்தி விடும். அப்படி ஒரு சுய பரிசீலனை செய்துகொள்ள ரயில்கள் இயங்காத இந்த கொரோனா காலம் என்னை உந்துகிறது.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன். எதற்காக தாமதமானது என்று நினைவில் இல்லை. ஆனால் அன்று நான் சென்னை சென்ட்ரலில் ரயில் ஏறும்போது  இரவு எட்டு மணி இருக்கும். மகளிர் பெட்டியில் வழமையான கூட்டம். நான் பின்னால் ஒரு இடம் பிடித்துக் கொண்டு கண்களை மூட தொடங்கினேன். கண்விழித்து பார்த்தபோது ரயில் வில்லிவாக்கம் வந்திருந்தது. பெட்டியில் கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது.

குட்டித்தூக்கம் தந்த புணர்ச்சியில் பெட்டியில் கண்களை அலையவிட்ட படி வந்தேன். அப்போது எதிரில் இருந்த ஒரு பெண், "அக்கா நீங்க…" என்று பேசத் தொடங்கினார். அவர் சொன்ன பிறகுதான் தெரிந்தது அவர் எனது தங்கையின் கல்லூரி தோழி என்று. அவர் பெயரை சொன்னதும் எனக்கு ஆள் பிடிபட்டு விட இருவரும் பேசிக்கொண்டே வந்தோம்.

இரண்டொரு நிறுத்தங்கள் கடந்த நிலையில், பெட்டியின் மற்றொரு மூலையில் இருந்து சில பெண்கள் யாரையோ விசாரிப்பது போல் கடுமையாக பேசுவதைக் கேட்க இருவரும் கவனத்தை அந்தப் பக்கம் திருப்பினோம். சத்தம் வந்த மூலையில் ஒரு சிறுமியை சுற்றி வளைத்து சில பெண்கள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண் இன்னொருவரிடம், "எங்க ஏறிச்சின்னு தெரியல, சீட்டுக்கு அடியில ஒளிஞ்சிகிட்டு இருந்திருக்கு. அதோ அவங்கதான் பார்த்தாங்க…" என்று விளக்கிக் கொண்டிருந்தார்.

விஷயம் மெல்ல புரிய தொடங்கியது. அந்தப் பெண்ணுக்கு பத்திலிருந்து 12 வயது இருக்கும். ரொம்பவும் அழுக்கில்லாத பழைய கவுன் ஒன்றை அணிந்திருந்தார். எண்ணெய் இல்லாத முடி அவிழ்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. நீ யார் என்று திரும்பத் திரும்ப கேட்கப்பட்ட கேள்விக்கு அவள் பலவிதமாய் பதிலளித்தாள்.
அம்மா ஏதோ வியாபாரம் செய்வதாக சொன்னாள். மாமா வந்து தன்னை கூட்டி செல்வார் என்று சொன்னார். சில சமயம் தனக்கு தம்பி இருக்கிறான் என்றும் சொன்னாள். தன் அம்மா யாரிடமோ கடன் வாங்கினார் என்றும் இன்னும் பல தொடர்பில்லாத பதில்கள் சொன்னாள்.

இதற்குள் ஒரு நிறுத்தத்தில் காவல்துறை பெண்மணி ஒருவர் ஏறினார். அவரும் அந்த சிறுமியை கடுமையான குரலில் விசாரித்தார். பெட்டியில் இருந்த கூட்டம் குறைந்து இப்பொழுது 10 - 15 பேர் மட்டுமே இருந்தோம். சிறுமியை சுற்றியிருந்த பெண்கள் அனைவரும் இறங்கிவிட ஒரு பெண் மற்றும் அந்த காவல்துறை பெண் மட்டுமே இருந்தார்கள்.

"உன் வீடு எங்க இருக்கு?"
….
"இந்த வண்டியில எப்படி வந்த?"
….
"உன் அம்மா பெயர் என்ன? போன் நம்பர் இருக்கா?"
….
இப்படி பல கேள்விகள் அந்த சிறுமியின் முன் அடுக்கப்பட்ட அவள் இப்போது அழத்தொடங்கினாள்.

"இப்ப எதுக்கு அழுற? அழாத…" மீண்டும் கண்டிப்பான குரல். சிறுமி ஒன்றும் பேசாமல் மிரண்டு போய் அழுகையை அடக்கிக் கொண்டாள். சிறிது நேர மௌனத்திற்கு பிறகு பக்கத்தில் இருந்த பெண் கொஞ்சம் கனிவாக அவளிடம்,

"நீ பயப்படாத. போலீஸ்கார அம்மா உன்ன உங்க வீட்டில விட்டுருவாங்க." என்று ஆறுதல் சொன்ன போதும் சிறுமி நம்புவதாக இல்லை.

அச்சம் குடிகொண்டிருந்த அவளது கண்கள் பெட்டியை சுற்றிலும் தனக்கு ஆதரவு கிடைக்கிறதா என்று தேடியது. தன்னையே உற்று நோக்கி கொண்டிருக்கும் அத்தனை விழிகளையும் சமாளிக்கத் தெரியாமல் மேலும் கலவரப்பட்டது. உண்மையில் அவளுக்கு யாரும் இல்லையா அல்லது சொல்ல விரும்பவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் அந்த நொடி அவள் அனுபவித்த வேதனை என்னவென்று என்னால் உணர முடிந்தது.

மனதில் ஏதோ உந்துதல். நேராக அவள் அருகில் சென்று அமர்ந்து, தண்ணீர் குடி என்று கொஞ்சம் தண்ணீர் கொடுத்தேன். அவள் அதை வெறும் கடமைக்கு குடித்துவிட்டு பாட்டிலை திரும்பக் கொடுத்தாள். நீ பயப்படாதே என்று ஆறுதல் சொன்னேன். நான் உனக்கு உதவி செய்கிறேன் என்றும் சொன்னேன். சிறுமி சரி என்று தலையசைத்தாள். தொடர்ந்து நானும் அவளது அம்மா எங்கே என்பது போன்ற பழைய கேள்விகளையே கேட்க அவளும் முன்பு சொன்ன பதில்களை சொன்னாள். அவளுக்கு என்மீது ஏதோ நம்பிக்கை வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இடையில்,
"அக்கா என்னை அவங்களோட அனுப்பாதீங்க" என்றாள் போலீஸ்கார பெண்மணியை காட்டி.

"சரி நீ அவங்க கூட போக வேண்டாம். என் வீட்டுக்கு வா" என்றேன்.
சரி என்று ஒத்துக் கொண்டாள். மீண்டும் நான் கேள்விகளை தொடர அதே பதில்கள்தான் வந்தது. ஆனால் ஒவ்வொரு பதில் முடிவிலும் "நான் உங்க கூட வந்துரங்கா" என்று மட்டும் தவறாது சொன்னாள்.

நீண்ட நேரம் அவளிடம் பேசிய பிறகும் அவளை எங்கு கொண்டு சேர்ப்பது என்ற முகவரியை மட்டும் அவள் சொல்லவே இல்லை. எனது தங்கையின் தோழி அவளது நிறுத்தம் வர என்னிடம் சொல்லிவிட்டு இறங்கிக் கொண்டாள். அவள் இறங்கிய ஒரு நிறுத்தம் கழித்து நான் இறங்க வேண்டும். சிறுமியின் பதில்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் அவள் என்னுடன் வந்துவிடலாம் என்று எண்ணி இருந்தது புரிந்தது. அதேசமயம் அவளை என்னுடன் அழைத்துச் செல்ல முடியாது என்பதும் புரிந்தது.

போலீஸ்கார பெண்மணி, "மேடம் நீங்க இறங்குங்க. நான் பார்த்துக்கிறேன்" என்று சொன்னவாறு இருந்தார். அவரது பேச்சு சிறுமியை மேலும் பதற்றத்திற்கு உள்ளாக்கியது. அவளது பதற்றம் என்னையும் தொற்றிக்கொண்டது. சிறுமிக்கு ஏதோ ஆறுதல் சொல்லி ஒரு வழியாக எனது நிறுத்தத்தில் இறங்கி கொண்டேன். ஆனால் மனம் மீண்டும் மீண்டும் நான் செய்தது சரியா என்று கேட்டுக்கொண்டே இருந்தது. நடந்ததை வீட்டில் சொன்னபோது அவளை வீட்டிற்கு கூட்டி வந்து இருந்தால் மட்டும் அவளுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார்கள்.

இரண்டொரு நாள் மன வருத்தத்திற்கு பிறகு ஒரு தெளிவு கிடைத்தது; யாருக்கும் போலியான நம்பிக்கையை கொடுக்கக்கூடாது. இன்னும் கொஞ்ச நாள் கழித்து இன்னொன்றும் விளங்கியது; நான் அந்தப் பெண்ணை அழைத்துவர முடிவு எடுத்திருந்தாலும் அந்த போலீஸ் பெண்மணி அதற்கு அனுமதி கொடுத்திருக்க மாட்டார். இரண்டொரு வருடங்கள் கழிந்தபிறகு மேலும் ஒரு தெளிவு கிடைத்தது; நான் அந்த போலீஸ்கார ப்பெண்மணியின் தொலைபேசி எண்ணை பெற்று அவரை தொடர்பு கொண்டு சிறுமியின் நலனை பற்றி தெரிந்து கொண்டிருக்கலாம். அடுத்த நாள் சிறுமியை சென்று பார்த்திருக்கலாம். அவள் பாதுகாப்பான ஒரு இடத்தில் இருக்கிறாளா என்று உறுதி செய்து இருக்கலாம். தெளிவும் தைரியமும் இல்லாத கருணை யாருக்கும் பயனற்று போகிறது.

10 வயது குழந்தைக்கு எப்படிப்பட்ட தொல்லைகள் நேர்ந்திருந்தால் அது இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கும்! விடுதலையைத் தேடித் தான் அவள் அந்த ரயிலில் ஏறி இருப்பாள். அஃறிணையான ஒரு ரயில்வண்டி கொடுத்த நம்பிக்கையை சக மனிதர்களாகிய நாம் கொடுக்க தவறி விட்டோம். ரயில்களை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள் ஏராளம். ரயில் வியாபாரிகள் அனைவரும் மாற்றமே இல்லாமல், "இன்னும் ஒரு வண்டி பார்த்தால் எல்லாத்தையும் விற்று விடுவேன் என்று தான் சொல்ல கேட்டிருக்கிறேன்". யாரும் மனிதர்களை குறிப்பிட்டு சொல்லுவதில்லை. மனிதர்கள் ரயில்களை போல் இயந்திரங்கள் ஆகிவிட்டதால் அவர்களுக்கு பதில் ரயில்கள் நம்பிக்கை அளிக்கின்றன அந்த சிறுமிக்கு கொடுத்தது போல. அவளை நான் சந்தித்தது 10 ஆண்டிற்கு முன்னால். அவளுக்கு பாதுகாப்பான ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.