Thursday 23 April 2020

கொரோனா காலத்தில் பின்னோட்டம்; ரயில்கள்


காலையில் கல்லூரி தோழி ஒருவர் என்ன சங்கதி (அதாங்க வாட்ஸ்அப்) யில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியிருந்தார்; நான் ரயில் பற்றி எழுதிய ஒரு நிகழ்வின் சுட்டி வேண்டி. அது ரயில்களை பற்றிய நினைவுகளை கிளறிவிட்டது. ரயிலில் கால்வைத்து இன்றோடு 33 நாட்கள் ஆகிறது. ரயிலின் ஓசை கேட்பதும் நின்றுவிட்டது. சென்ற வாரம் மளிகை வாங்க சென்றபோது சரக்கு ரயில் ஒன்றை பார்த்தேன் அவ்வளவுதான். தண்டவாளங்கள் ஓய்வெடுக்கும் போலும்.

எங்கள் ஊருக்கு எப்போது ரயில் நிலையம் வந்தது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் ரயில் நிலையம் வந்த பிறகுதான் எங்கள் ஊருக்கு ஆங்கில பள்ளியும் வந்தது. அந்த பள்ளியில் தான் அப்பா என்னையும் ஓரிரு ஆண்டுகள் கழித்து எனது தங்கையையும் சேர்த்தார். ரயில் நிலையம் கடந்துதான் அந்த பள்ளிக்கு செல்ல வேண்டும். காலை மாலை இருவேளையும் எங்களை சைக்கிளில் அமர்த்தி பள்ளிக்கு கொண்டு சென்று வருவது பெரியப்பாவின் விருப்ப வேலை.

ரயில் நிலையம் வந்தபோதுதான் எங்கள் ஊரில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியும் தொடங்கப்பட்டது என்றே நினைக்கிறேன். எங்கள் தெருவில் இறங்கி நடந்தால் நேராக கல்லூரியில் முகப்பில் நிற்கலாம். அதனால் மாணவர்களின் விருப்ப வழித்தடமாக எங்கள் தெரு அமைந்திருந்தது. அப்போதெல்லாம் எங்கள் தெருவில் நிறைய புளிய மரங்கள் இருக்கும். தெருவில் நடந்து செல்லும் மாணவர்களின் மிகப்பெரிய சந்தேகம் இந்த ஊருக்கு ஏன் வேப்பம்பட்டு என்று பெயர் வைத்தார்கள் என்பதுதான். அவர்களின் கருத்துப்படி புளிய மரங்கள் நிறைய இருப்பதால் புளியம்பட்டி என்று பெயர் வைத்திருக்க வேண்டுமாம். ஆனால் அவர்கள் நடந்து சென்ற தெரு பெருமாள்பட்டு கிராமத்தில் உள்ளது என்பது அவர்களுக்கு தேவையற்ற ஒரு தகவல். ஏனெனில் ரயில் நிலையங்கள் ஊர்களை ஒன்றிணைந்து ஒரு புதிய அடையாளத்தை தந்துவிடுகின்றன. இன்றும் எங்கள் ஊரின் பெயர் பெருமாள்பட்டு தான். ஆனால் நானே கூட அதை அதிகம் உபயோகப்படுத்துவதில்லை. ஒருவேளை பிலிப்கார்ட் அமேசான் டெலிவரி பையன்களுக்கு தெரிந்திருக்கும். வீட்டு முகவரியில் இன்றும் பெருமாள்பட்டு தான்.


எனது சித்தப்பாக்களும் அத்தைகளும் அண்ணன்களும் அண்ணிக்களும் குறைந்தது ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்துதான் பள்ளிக்கு சென்றார்கள். அதனால்தான் என்னவோ தோல்வியுற காத்திருந்தது போல ஒரு வகுப்பில் தேர்ச்சி பெறத் தவறினால் வீட்டிலேயே தங்கி கொண்டார்கள். 12 வரை சோரம் போகாமல் முடித்திருந்த அத்தைக்கு திருமணம் செய்விக்கப்பட்டது. 12 முடித்த ஒரு சித்தப்பா மட்டும் சென்னை அம்பேத்கர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அதுவும் ரயில் நிலையம் வந்த பிறகுதான்.

ஆனால் அப்பா மட்டும் ரயில் நிலையம் வருவதற்கு முன்பிருந்தே ஆவடியில் பணிபுரிந்து வந்தார். பக்கத்து ஊரான திருநின்றவூர் வரை சைக்கிளில் சென்று அங்கிருந்து ரயில் பிடித்து ஆவடி செல்வார்.

திருநின்றவூரில் டாடா குழுமத்தின் எஃகு உருட்டு ஆலை ஒன்று இருந்தது. ஆலைக்கு உள்ளிருந்து தண்டவாளம் ஒன்று வெளியே பிற தண்டவாளங்கள் உடன் இணையும். சரக்கு ரயில்கள் ஆலையின் உள்ளே செல்வதை நான் ஒருபோதும் பார்த்தது கிடையாது. ஆலை பாழடைந்து கிடக்கும். ஆனால் பெரியப்பா ஒரு காலத்தில் அந்த ஆலையில் இரண்டு ரூபாய் கூலிக்கு வேலை பார்த்ததாக சொல்லுவார். பத்தாண்டுகளுக்கு முன்பு ஆலை புதுப்பிக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது. இப்போதெல்லாம் உருளையாக சுத்தப் பட்ட எஃகு தகடுகள் பெரிய பெரிய லாரிகளில் தான் எடுத்து செல்லப்படுகிறது.

உள்ளூரில் படித்த காலத்தில், வீடு திரும்பும் போது தவறாமல் செய்தது சரக்கு ரயில்களின் பெட்டிகளை எண்ணியது. மிக அதிகமாக 92 பெட்டிகள் வரை எண்ணியிருக்கிறேன். அவ்வளவு பெரிய ரயில் இருக்குமா என்று இப்போது சந்தேகமாக உள்ளது. ஆவடியில் படிக்கும் போது பல நாட்கள் பீரங்கிகள் ஏற்றிய கூரையில்லாத ரயில்கள் நிற்கும். அவற்றை பார்க்கும் போது எப்போதும் ஒரு பெருமிதம். அப்பா கனரக தொழிற்சாலையில் (HVF) வேலை பார்த்தார். எனக்குதான் அந்த வண்டிகளைப் பற்றி எல்லாம் தெரியும் என்ற மிதப்பு.

உண்மையில் அவை பழுது பார்க்க தொழிற்சாலைக்கு வரும் வண்டிகள் என்பது அப்போது தெரியாது. அதோடு அப்பா தொழிற்சாலையில் தொலைபேசி இனைப்பாளர். அவரது அலுவலக பிரிவு தொழிற்சாலையின் நுழைவாயிலுக்கு வெளியே நின்று போனது என்பதும் அப்போது தெரியாது. 11 வயதில் நானே ரயில் ஏறி பள்ளிக்கு சென்றதில் ஒரு நிறைவு.

ரயில்கள் வந்த போது தான் வீட்டு வசதி வாரியம் எங்கள் ஊருக்கு வந்தது. ரயிலில் என்னோடு புதிய மனிதர்கள் பலர் பயணித்தனர். நாங்கள் பிழைப்பு நடத்த சென்னை நோக்கி சென்றோம். அவர்கள் உண்டு உறங்கி சொந்தம் என்று உரிமை கொண்டாட ஒரு மனை வேண்டும் என்று சென்னையிலிருந்து வந்தார்கள். ரயில்கள் இப்படி தான் பல புதுமைகள் நிகழ்த்தியது.

ரயில்கள் என் வாழ்வோடு பின்னிப் பிணைந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்று சென்னை நோக்கி ரயில்பிடித்த கால்கள் இன்று எதிர் மார்கத்தில் ரயிலுக்காக காத்திருக்கின்றன. இந்த கொரோனா காலத்து முழுஅடைப்பில் நம்மை வீட்டிற்கு உள்ளே வைத்திருப்பதும் ரயில்கள் தான். யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே அது போல. ரயில்கள் இல்லாததால் நாமும் வீட்டிற்குள் இருந்து கொள்கிறோம். அவை வெளியே வரும் போது நாமும் வெளியே வருவோம்.

நீலம் பூக்கும் திருமடம் : எனது பார்வை


நீல நிறம் பல முக்கியமான விஷயங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது. கடலின் நிறம் நீலம். வானத்தின் நிறம் நீலம். இந்து சமயத்தில் நீளத்திற்கு என்று ஒரு தனி கதை உண்டு. சிவன் நீலகண்டன் ஆவான். கொடிய விஷம் என்று கருதப்படும் ஆலகால விஷம் நீலநிறமுடையது என்றே புராணங்கள் சொல்லுகின்றது. இந்தியா வரலாற்றில் நீல நிறம் தலித் எழுச்சி குறிக்கும் நிறமாக உள்ளது. ஐரோப்பிய பண்பாட்டிலோ நீல நிறம் அரச குடும்பத்தை குறிப்பதாக இருக்கிறது. அரச குடும்பத்தை சேர்ந்தவர்களை ப்ளூ பிளட் என்றே அழைக்கிறார்கள். நீல நிறம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தொழில் புரட்சிக்கு முந்தைய காலங்களில் நீல நிறத்திலான துணி வகைகள் அதிகப்படியான விலைக்கு விற்கப்பட்டதாக என்று ஒரு செய்தியும் கேட்க கிடைக்கிறது. இப்படி நீல நிறம் அதிகம் காண கிடைக்கும் நிறமாகவும் அதேசமயம் தனித்துவம் வாய்ந்த நிறமாகவும் இருக்க ஆசிரியர் தன் சிறுகதைத் தொகுப்பிற்கு நீலம் பூக்கும் திருமடம் என்று பெயரிட்டுள்ளார். இந்தத் தொகுப்பில் வரும் நீலநிறம் ஐரோப்பிய மரபின் சிறப்புகளை பெற்றுள்ளதா அல்லது இந்து சமய அதிர்வலைகளை கொண்டுள்ளதா என்று சற்றே உள் சென்று பார்க்கலாம்.

தொகுப்பின் தலைப்பிட்ட சிறுகதையின் நாயகி நீலா கணவனை இழந்து குழந்தையும் இறந்து தனித்து வாழும் பெண். அவளது சொந்த வீட்டிலேயே அன்னியர்களால் கொல்லப்படுகிறாள். அவளது கணவன் அதற்கு முன்பு அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறான். அவர்களது சின்னஞ்சிறு பெண் குழந்தை அந்த வீட்டில் பிறந்து ஓரிரு மாதங்களிலேயே இறந்துவிடுகிறது. நீலாவின் கணவனுக்கு இந்த உலகுடன் இருக்கும் பந்தம் நீல நிறத்திலும் நீலம் என்ற பெயராலும் மட்டுமே நிலைக்கிறது. அவன் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் நீளத்தை முன்னிறுத்தி அல்லது அதில் மூழ்கி விடும் எண்ணத்துடனே மேற்கொள்கிறான். நீல நிறத்தை பார்க்கும் போது அந்த நிறம் அவனைப் போலவே தனித்துவம் வாய்ந்ததாக மிளிர்கிறது. அதேசமயம் அவனது மரணத்தை நிர்ணயிக்கும் ஒரு பொருளாகவும் நிறம் உரு பெற்றுவிடுகிறது. தன் தாயே தனக்கு மகளாக பிறந்து விட்டதாக எண்ணி களிப்புற்ற அவன் குழந்தை இறந்து விட தனக்கும் நீலத்திற்கும் இருந்த பந்தம் அழிந்துவிட்டதாக எண்ணியே தற்கொலை செய்து கொள்கிறான். அவனுக்குப் பிறகு அவன் மிகவும் ரசித்து வாங்கிய அந்த நிலம் மற்றும் அந்த வீடு அவனால் பெயர் சூட்டப்பட்ட நீலாவை கொள்ளும் கொலைக்கருவி ஆகிறது. இந்த கதையின் படி நீல நிறம் நஞ்சு என்ற ரீதியிலேயே முன்வைக்கப்ப்பட்டுள்ளது எனலாம்.

ஆனால் நீலம் என்ற வார்த்தையோ அல்லது நிறமோ வேறு எந்த கதையிலும் இடம்பெறவில்லை. நீலம் பூத்த திருமடம் நிலாவிற்கு தனிமையும் மரணத்தையும் தான் அளிக்கிறது.  இந்த சட்டகத்தை கொண்டு பிற கதைகளில் நோக்குவோமேயானால் நீலம் மரணமாக மிளிர்வதைக் காணலாம். காந்தாரி தனது உயிரை இழக்கவில்லை எனினும் தானே முன் வந்து தன் பார்வையை இழந்துவிடுகிறாள். நீ நான் கதையில் வரும் பெயரற்ற நாயகி அவளது சுதந்திரத்தை இழந்துவிடுகிறாள். குரு பீடத்தின் சிவகாமி இறந்துவிட்ட தனது நம்பிக்கையை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாரள். கிடப்பில் கிடத்தப்பட்டிருக்கும் நாகம்மாள் சொந்தங்களுக்கு அலுப்பு ஊட்டிய நிலையில், திருடனின் கைகளால் கருணையினை பெற்று ஏகாந்தத்தில் மரணிக்கிறாள். பதின்பருவத்தில் காதல், மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கு பதிலாக காந்திமதிக்கு மன உளைச்சலை தருகிறது. வாடிக்கை மறந்ததும் ஏனோ…. நாயகியை இந்த சட்டகத்தினுள் கொண்டு வர நான் விரும்பவில்லை. அதன் காரணங்களை பின்னர் காணலாம்.

ஆக நீலம் என்பது தனித்துவமிக்கதாக இருக்கும் அதே நேரத்தில் அது நேர்மறையான பொருளுள்ளதாக கருத முடியவில்லை.

இந்த  நாயகிகளுக்குள் நஞ்சை தவிர்த்த வேறு ஒரு ஒற்றுமை உண்டு. அது அவர்களின் தன்னிலைகள். இவர்களை நாம் இரு குழுக்களாக பிரிக்கலாம். காந்தாரி, நான் நீ நாயகி, நாகம்மா மற்றும் சிவகாமி ஆகிய நால்வரும் எதார்த்தத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியினை உணர்ந்த தன்னிலைகள். ஏனைய மூவரும் -  நீலா, மதி, மற்றும் காந்திமதி - எதார்த்தத்துடன் ஓடிக் கொண்டிருப்பவர்கள். முதல் நால்வரும்  தங்களின் விருப்பு வெறுப்பை மீறி தங்களின் வாழ்க்கையை பிறர் கட்டுப்படுத்துவதை நன்கு உணர்ந்தவர்கள். தங்களால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாமல் சிக்குண்டு தவிப்பவர்கள்.

 இரண்டாம் குழுவினர் தங்களின் தன்நிலைகளை உணராது இருப்பவர்கள். காந்திமதி காதலித்தால் தனக்கு இக்கட்டுகள் நேருமென்று அதனை தவிர்த்து விட்டு தப்பிக்க நினைப்பவள். நீலா காதலுக்காக தனது பெயரையும் கூட விட்டுக்கொடுத்தவள். காதலன் பிரிந்தபோதும் கூட தன்னுடைய இருப்பினை இறந்துவிட்ட தனது குழந்தை மற்றும் கணவன் விட்டு சென்ற வீடு என சுருக்கிக் கொண்டவள். மதியோ தனது வாழ்வினை தனது தந்தையின் நினைவுகளிலிருந்து பிரித்து பார்க்காதவள். இப்படியாக இந்த இரண்டு குழுக்களின் தன்நிலைகளும் தான் கதையினை நகர்த்திச் செல்கிறது. காந்தாரியின் முடிவைப் பற்றி திருதராஷ்டிரன் எந்தவித ஆர்வமும் காட்டாமல் இருப்பதுதான் அவளை தன் கண்களைத் திறந்து உலகத்தைப் பார்க்க உந்துகிறது. பெண்கள் பெற்றோருக்கும் புகுந்த வீட்டாருக்கும் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்ற விதிதான் நீ நான் கதையின் பெயரில்லாத நாயகியை தனக்கு நடக்கும் கொடுமையை கூட பரிகசிக்க வைக்கிறது.

கதாநாயகிகளின் தன்னிலைகள் தான் கதைகளின்  அரசியலையும் விளங்குகிறது. The personal is political என்று சொல்வதைப் போல் இந்தப் பெண்கள் இவர்களது வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் பெண் பாலினத்தின் இருப்பினை, அவலத்தினை எடுத்துரைக்கிறது. பெண் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்படுகிறாள். ஒரு நாட்டின் அரசியல் நட்புகளை தீர்மானிக்க, குடும்ப கௌரவத்தை கட்டிக்காக்க, காதலை வளர்த்தெடுக்க, ஆண் வழி சமூகத்தின் பெருமையினை நிலைநிறுத்த என அவள் தனது தன்நிலையினை சமூக நிறுவனங்களின் தேவைக்கேற்ப அச்சடிக்கிறாள்.

பெண்களின் இருப்பைப் பற்றி பேசும் கதைகளெல்லாம் பல நேரங்களில் அவர்களை பாதிக்கப்பட்டவர்கள் ஆகவே நிறுவுகிறது. ஆனால் தீபா அவர்களோ இந்த கம்பியின் மேல் மிக லாவகமாக நடந்து அவலம் என்னும் சுவையினை பல இடங்களில் தவிர்த்திருக்கிறார். ஒருகட்டத்தில் காந்தாரி சொல்லுகிறாள், “நான் எனது கண்களை கட்டி இராவிட்டால் நீங்கள் அதை பறித்திருப்பீர்கள்” என்று. இருப்பினும் அவள் தனது நிலை குறித்து வருந்துபவள் இல்லை. அவள் சொல்கிறாள்:  “ இது தியாகம் அல்ல. இது ஒரு வைராக்கியம். சிறுவயதிலிருந்தே இருட்டை பார்த்து அச்சப்படுபவளாக இருந்திருக்கிறேன்.  எது நமது பலவீனமோ அதற்குத்தான் சோதனை வரும் என்று நீதானே சொல்லுவாய். அதை நான் எதிர்கொள்ளப் போகிறேன்.” அவளைப் போலவே நாகம்மாவும் இந்த கிடங்கில் என்னை விடுவார்கள் என்று தெரிந்திருந்தால் தான் நன்றாக இருக்கும் பொழுதே இதை சுத்தப்படுத்தி இருப்பேன் என்றே எண்ணுகிறாள். “உங்கள் பேத்தியை பள்ளிக்கூடத்தில் சேர்ந்து விட்டீர்களா” என்று நிதானமாக ஒரு கேள்வியைக் கேட்டு சமூக பாரம் முழுவதையும் மாறன் வாத்தியாரின் தலையின்மேல் வைக்கிறாள் சிவகாமி. காதலால் கட்டிப் போடப்பட்டிருக்கும் நீலா கூட தன் போராட்டம் வெற்றி பெறாமல் தான் உயிர் துறக்கிறாள். இப்படி பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி பேசினாலும் கதை மாந்தர்கள் தன்னிரக்கத்தைத் கொண்டவர்களாக இல்லாமல் இருக்கிறார்கள். இது இக்கதைகளின் மிகப்பெரிய பலம்.

அவலச் சுவைக்கு அதிக வாய்ப்புக்கள் கொண்ட நீலாவின் கதையில் பொருளியல் உலகை மனோதத்துவ உலகுடன் இணைத்து அவளது வாழ்விற்கு பொருள்தருகிறார். “வீட்டினுள் அறிமுகமற்ற சிலரின் நடமாட்டத்தை நீலா உணர்வு கடந்து வெறித்துக் கொண்டிருந்த போது பழகிய அந்த அழுகை சின்னஞ்சிறு அலறலாய் தொடங்கியது. தன்னை தூக்கி கொள்ளுமாறு அவளிடம் இறஞ்சியது. தன்னுடைய மடியில் கிடந்து ஒலித்த குரலை சமாதானம் செய்தே ஆகவேண்டும் என்ற உந்துதல் நீலாவுக்கு எழுந்தது. கட்டிய மார்பு பெருக்கெடுத்தது” என்று நீலாவின் மரணத்தை அவளது மகளுடன் சேர்தலாக நமக்கு அளிக்கிறார்.  “இவன் என்ன? ஹெலிகாப்டரில் எல்லாம் கூட வருவாங்க அவனுவளையே சமாளிப்போம் வாடி…” என்று ராதாவின் கூற்றாக உற்சாகம் அளிக்கிறார்.

சிறுகதை என்பது மிகக்குறுகிய இடத்தையே விவாதத்திற்கு அளிக்கிறது. இதில் பெண் அரசியல் சாரம் முழுவதையும் எழுதுவதற்கு அதிக நாட்கள் பிடிக்கும். தீபா அவர்கள் தன்னுடைய முன்னுரையில் சொல்கிறார் “வழிநடையில் வந்து நின்றால் நலம் விசாரிக்கும் கரிசனத்தோடு சிலர் என்னுடைய கதைக்குள் வந்தார்கள். இன்னும் பலர் சரியான சமயத்தில் வந்துசேர்வார்கள். காத்துக் கொண்டிருக்கிறேன்”. கதைகள் வந்து சேர்ந்ததாக குறிப்பிட்டிருந்தாலும், கதைகளில் தேர்ந்த பெண் அரசியலை பார்க்க முடிகிறது. ஏழு கதைகளிலும் ஏழு விதமான பெண்கள் அவர்கள் சந்திக்கும் வித விதமான  பிரச்சனைகள். ஆண்கள் அரிதாகவே வந்து போகிறார்கள். இவற்றிற்கெல்லாம் கிரீடம் வைத்தாற்போல் காந்தாரி சொல்கிறாள்: “ஆண்களுக்கு ஒரே வாய் தான். ஆனால் பேசக்கூடிய நாக்குகள் தான் விதவிதமாய் முளைத்திருக்கின்றன.”

கதைகளின் மொழி:
பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கதைக்களமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகள் என்பதால் அவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ் இடமோ பேசு மொழியோ தேவை இல்லைதான். இருப்பினும் வட்டார வழக்கு நிரம்பிய ஜான்சிராணியை பின்தொடரும் காதல் எனும் சிறுகதை மிக உயிர்ப்புடன் இருந்தது. அந்த வட்டாரத்திற்குள் இருக்கும்போதுதான் ஆசிரியர் அங்கதத்தை வெளிப்படுத்துகிறார். “இந்த ஊரிலேயே நாமதான் அழகா இருக்கோமாடி” என்று ராதா கேட்கும்பொழுது சிரிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது.

முன் சொன்ன வாடிக்கை மறந்ததும் ஏனோ…
தொகுப்பில் உள்ள கதைகளுள் தனித்து தெரிவது வாடிக்கை மறந்ததும் ஏனோ கதை. மதி என்னும் பெண் தன் தந்தையின் நினைவுகளுக்குள் மூழ்கி தன்னை கண்டடைகிறாள். இந்த கதையில் ஆசிரியர் இருண்மையை கையாள்கிறார். முதலில் மதியின் வயது பற்றி நமக்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு பின்னர் அவள் வயது முதிர்ந்தவர் என்று நமக்கு சுட்டிக் காட்டி ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவினை நம் கண் முன்னால் கொண்டு வருகிறார். குழந்தைகளுக்கு பெற்றோரின் தேவை மற்றும் அருமை அவர்களது முதிர்ந்த வயதில் தான் புலப்படுகிறது. அதுபோலவே மதியும் தனது முதிர்ந்த வயதில் தான் தன் தந்தையின் மன ஓட்டத்தை நன்றாக புரிந்து கொள்கிறாள். தந்தைக்காக அவள் மனம் கசிகிறது. இந்த கதை தொகுப்பில் தனித்து தெரிவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. தொகுப்பில் அதிகமான நேரம் ஒரு ஆணை மையப்படுத்தி நிகழும் கதை இது ஒன்றுதான். அதுபோலவே ஆண்களை அன்போடு எந்தவித எதிர்மறை எண்ணங்களும் இல்லாமல் நினைவுகூறும் கதையும் இதுதான். மதியின் தன்னிலை ஒடுக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட நிலையாக இல்லாமல் முதுமை என்னும் ஒற்றைப் புள்ளிக்குள் பாலினம் அனைத்தும் அடக்கம் என்று காட்டுகிறது. ஒருவகையில் நாகம்மாவும் நீலாவும் மதியும் ஒத்த வயதினராக இருக்கும் பட்சத்தில் தன் தந்தையின் வயோதிகத்தின் ஊடாக தனது வயோதிகத்தை புரிந்து கொள்ளும் அம்சம் நிச்சயமாக மற்ற இரண்டு கதைகளில் இல்லை. பெண்ணுக்கு ஆண் எதிரி என்ற தட்டையான பார்வையை விடுத்து மறக்கமுடியாத ஒரு தந்தையை கொண்டுள்ளது. தந்தை மகளுக்கு என்ன செய்தார் என்று ஆராயாமல் ஒரு தந்தையின் வசீகரத்தையும், ஒரு குழந்தையின் பரவசத்தையும் படைத்தளிக்கிறது.

இவ்வாறு கதைகள் ஒவ்வொன்றும் அதன் களத்திற்கேற்ப ரசனையோடு நெய்யப்பட்டிருக்கிறது.



Thursday 9 April 2020

எப்படி சொல்ல முடியும்?


மனிதர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் பிரதானமாக பேச்சிழந்து போகிறார்கள். ஒன்று சிந்தனை செயல் இழந்து போகும் பொழுது மற்றொன்று சமூகம் அவர்களது சிந்தனைக்கு கட்டுக்கள் இட்டு இருக்கும்போது. இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் பாதிப்பு பேசாமல் இருப்பவர்களுக்கே. மனிதர்களை அவர்களது செயல்கள் நிர்மாணிக்கும் அளவிற்கு சொற்களும் நிர்மாணிக்கிறது. இதைத்தான் கவிஞர் யுகபாரதி “சொல்லுறதில் பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம்” என்றார் கும்கி படத்திற்காக.

சொல்லுறதில் உள்ள இன்பத்தையும் சொல்லி விட்டால் துன்பம் இல்லை என்பதையும் உணராத கதை மாந்தர்கள் படும்பாட்டை தான் அண்ணா “சொல்லாதது” என்று நமக்கு படைத்து அளிக்கிறார்.

கதை சுருக்கம்:
பேரழகியான சுந்தரி ஆப்பம் சுட்டு விற்கும் தனபாக்கியத்தின் ஒரே மகள். கணவன் திருவேங்கடம் குடும்ப பற்றுதல் இன்றி தேசாந்திரம் சென்றுவிட அவளது வயிற்றுப் பிழைப்பிற்காக ஆப்பம் விற்பனை செய்கிறாள் தனபாக்கியம்.

அதே ஊரில் இருக்கும் பெரும் பணக்காரரான லோகு முதலியின் மகனான கனகசபேசன் சுந்தரியின் மேல் காதல் கொள்கிறான். சமூக கட்டுப்பாடுகள் எதையும் சட்டை செய்யாமல் இவர்களது காதல் வளர்கிறது. ஆனால் தன் குடும்ப சொத்துக்களை காப்பாற்ற கனகன் இலுப்பைபட்டி மிராசுதாரரின் மகளான காவேரியை மணந்து கொள்கிறான்.

கனகனுக்கு மணம் ஆகிவிட்ட நிலையில் தான் கருவுற்றிருப்பதை அவனுக்கு சொல்லாமல் மறுத்துவிடுகிறாள் சுந்தரி. அவளின் நிலை உணர்ந்த தாய் தனபாக்கியம் அவளை அழைத்துக்கொண்டு ஆற்றூருக்கு சென்றுவிடுகிறாள். மகளுக்கு தாயே தாலி கட்டிவிட்டு கணவன் கடல் தாண்டி வேலைக்கு சென்று இருப்பதாக ஊரில் சொல்கிறாள். சுந்தரிக்கு அழகான ஆண் மகவு பிறக்கின்றான்.
குழந்தைக்கு தங்கராசு என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வருகிறார்கள்.

காவேரியை மணந்த கனகு, தன் மாமனார் மிராசுதாரரின் கொடுமைகளில் இருந்து பல ஏழைகளை காப்பாற்றி விடுகிறான். யாருடனோ ஏற்பட்ட வழக்கு ஒன்றில் தன் சொத்துக்கள் முழுவதையும் இழக்கிறார் மிராசுதாரர். மிராசுதாரரையும் சேர்த்து காப்பாற்ற வேண்டிய நிலைக்கு வருகிறான் கனகசபேசன். சொத்துக்கள் இழந்த சோகத்தில் மிராசுதாரர் முதலில் காலமாகிரார். அவரைத் தொடர்ந்து லோகு முதலியும் மரணிக்க சற்று இடைவெளி விட்டு காசநோய் கண்டு காவேரியும் இறந்துவிடுகிறாள். மீளாத சோகத்தில் சிக்கிக் கொண்ட கனகசபேசன் வேலை தேடி கடல் கடந்து சென்று விடுகிறான்.

பல ஊர் சுற்றித் திரியும் திருவேங்கடம், மனிதர்களை புரிந்து கொள்ளும் நோக்கில் பல ஊர் பயணம் மேற்கொண்டு இருந்த அருமை நாயகம் பிள்ளை அவர்களுக்கு பசி நேரத்தில் உணவு கொடுக்கிறான். இதனால் திருவேங்கடத்தின் மேல் அன்பு கொண்ட அருமைநாயகம் அவனை தன்னுடனே அழைத்து வந்து ஆற்றூரில் இருக்கும் அவரது வீட்டில் தங்க வைத்துக் கொள்கிறார். திருவேங்கடம் ஆற்றூரில் தனபாக்கியத்தை சந்தித்து அவர்களுக்கு நிகழ்ந்துள்ள பெரும் சோகத்தை அறிந்து வருந்துகிறான். அருமைநாயத்தின் உத்தரவினால் அவரது வீட்டிலேயே ஒன்றாக ஒரு குடும்பமாக வாழ்கிறார்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் தங்கராஜனை கண்டு சுந்தரி தொலைத்துவிட்ட தனது வாழ்க்கையை எண்ணி வருத்தமடைகிறாள்.

கடல் தாண்டி வேலைக்கு சென்ற கனகசபேசன் கொடுமைக்கார முதலாளியிடம் இருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என்று தாய் நாடு திரும்புகிறான். திரும்பியவன் அருமை நாயகத்தின் தொழிற்சாலையில் பணியிடம் இருப்பதாக கேள்விப்பட்டு ஆற்றூருக்கு வருகிறான். அருமை நாயகத்தை சந்தித்து தன் கதை முழுவதையும் கூறி வேலை கேட்கிறான். அவன் யார் என்று உணர்ந்து கொண்ட அருமைநாயகம் சுந்தரியுடன் அவனை சேர்த்து வைக்கிறார். சுந்தரி கனகசபேசன் தன்னை ஏமாற்றியதை தன் மகன் தங்கராசுவுக்கு சொல்லிவிடுவதாக செல்லமாக கனகசபேசனை மிரட்டுவதும், அவன் அவளை கெஞ்சுவதும் கொஞ்சுவதுமாக கதை முற்றுப்பெறுகிறது.

முன் சொன்ன சொற்கள் பற்றிய எண்ண ஓட்டம்:
கதையின் முக்கிய மாந்தர்கள் அனைவரும் அவர்கள் பேசியிருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் ஏதோ ஒரு அனுமானத்தின் அடிப்படையில் பேசாமல் இருந்துவிடுகிறார்கள். தனபாக்கியம் பேரழகியான தனது மகள் சுந்தரிக்கு அவர்களது வறுமை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் சமூக அந்தஸ்த்தினை எடுத்து கூறாமல் வளர்க்கிறாள். சுந்தரிக்கு அது தெரிந்திருக்கும் என்ற அனுமானத்தில்.

சுந்தரியின் மனதில் ஏற்பட்டிருக்கும் சஞ்சலங்களை உணர்ந்தும் கூட தாய் மகளுக்கு பிரச்சனைகளின்றி பிழைத்துக் கொள்ளும் வழியினை சொல்லாமல் போகிறாள்.

சுந்தரியின் அழகை பெரிதும் ரசிக்கும் லோகு முதலி அவர்களது பொருளாதார நிலை அவளை தன் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கும் என்பதை தன் குடும்பத்தாருடன் கூட பேசாமல் இருந்து விடுகிறார். அவரது அனுமானம் இது அனைவரும் அறிந்ததே என்பது.

லோகு முதலியின் மகன் கனகசபேசன் சுந்தரியின் ஆப்பக்கடை தேடி அடிக்கடி செல்வது தெரிந்திருந்தும் அவனை எச்சரிக்காமல் மௌனம் காக்கிறார். தந்தை மகனிடம் அவனது காமம் சார்ந்த அந்தரங்கம் பற்றி பேசுவது கூடாது என்ற சமூக கட்டுப்பாடு.

கனகசபேசனும் தான் சுந்தரியின் மேல் கொண்டுள்ள காதல் பற்றியும் அவளை மணந்து கொள்ள விரும்புவது பற்றியும் தந்தையிடம் பேசாமல் தவிர்த்து விடுகிறான். இதற்குக் காரணமும் முன் சொன்ன அதே சமூகக் கட்டுப்பாடு.

சுந்தரி கருவுற்றிருப்பது தெரிந்த பின்பும் நியாயம் கேட்க கூட துணிவில்லாமல் எளியவர்கள் பணம் படைத்தவர்களை கேள்விகள் கேட்க முடியாது என்ற வரையறையை ஏற்றுக்கொண்டு வாய் திறக்காமல் ஊரை விட்டு அழைத்துச் சென்று விடுகிறாள் தாய் தனபாக்கியம்.

இப்படியாக அவர்களது அனுமானங்களும் சமூக கட்டுப்பாடுகளும் அவர்கள் வாய்களுக்கு பூட்டுக்கள் போட்டுவிட சுந்தரி மற்றும் கனகசபேசனின் வாழ்க்கை தடுமாறி சென்று விடுகிறது.

அண்ணா தனது எழுத்துக்களை பிரச்சாரமாக பயன்படுத்தினார் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இருப்பினும் அவரது சிறுகதைகளை கூர்ந்து கவனித்தால் அதில் கட்சியை தாண்டிய ஒரு முற்போக்கு வாதம் இருப்பதை நாம் கவனிக்க முடியும். அவரது மிகப் பிரபலமான செவ்வாழை சிறுகதையில் ஜமீன்தார் முறை எவ்வாறு ஏழைகளை ஒடுக்கியது என்று விளக்கி இருப்பார். சொல்லாதது சிறுகதையிலும் இந்த வர்க்க பேதம் தான் விவாதப் பொருள். அனைத்து தகுதிகள் இருந்தும் ஏழை என்ற காரணத்தினால் மரியாதைக்குரிய வாழ்க்கை கிடைக்காமல் போகிறது சுந்தரிக்கு. கனகசபேசன் பணத்தைப் பெரிதாக என்னும் வரை மனதுக்கு ஒவ்வாத ஒரு வாழ்க்கையையே வாழ்கிறான். பணத்தை துறந்துவிட்டு வரும்போதுதான் மனநிறைவான வாழ்க்கை அவனுக்கு கிடைக்கிறது. அதேசமயம் தன் பணத்தால் அடுத்தவரை ஒடுக்க நினைக்காத அருமைநாயகம் துன்புற்றோருக்கு ஆறுதல் அளிப்பவராக திகழ்கிறார்.

அதேசமயம் சொல்ல வேண்டியதன் அரசியல் பற்றி வெளிப்படையாக இந்த சிறுகதை பேசவில்லை. அதாவது ஏழை எளியவரின் விளிம்புநிலை மக்களின் அடிமைப்படுத்த பட்டோரின் உரிமைகோர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி இந்த சிறுகதை பேசவில்லை. மாறாக சமுதாயத்தில் பெண்கள் அனுபவிக்கும் இழிநிலையை எடுத்துக்காட்டுகிறது. கதையின் முடிவு ஆணின் அன்பை பெற்றால் மட்டும் போதும், கணவனின் கௌரவத்தை காப்பாற்ற வேண்டியது மனைவியின் கடமை என்ற கருத்துக்களை உணர்த்துவதாகவே இருக்கிறது.

சமுதாயத்தில் பெண்களின் இழிநிலை அவர்களை புறக்கணித்தல் போன்ற சமுதாய கேடுகளைப் பற்றி பல இடங்களில் பதிவு செய்துள்ள அண்ணாதுரை அவர்கள் இந்த சிறுகதையை முடித்த விதம் பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், தற்சார்புடன் வாழுதல் போன்ற கருத்துக்களை சிந்திக்க வில்லை என்றே காட்டுகிறது.

எனினும் ஒரு சிறுகதையை வைத்து ஒரு எழுத்தாளரின் அரசியலை தீர்மானிப்பது அவரை குறுக்கும் நோக்குடையது என்ற காரணத்தினால் அறிஞர் அண்ணா பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும் என்று மட்டும் விரும்பினாரா அல்லது அவர்களுக்கு அதிகாரமும் தற்சார்பும் கிடைக்க வேண்டும் என்றும் விரும்பினாரா என்பதை வாசகர்களின் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுகிறேன்.

அண்ணா என்றால் அடுக்குமொழி என்பது கதை முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. கதை இப்படி துவங்குகிறது: “அவளுக்கு சுந்தரி என்ற பெயர் காரணப் பெயராகவே அமைந்தது என்று எந்த இலக்கண பண்டிதரும் சொல்லவில்லை. சொல்வானேன்? மலரை எடுத்து வைத்துக் கொண்டு ஆகா! என்ன மனம், எவ்வளவு இன்பம் என்று சொல்லாமலே, எவ்வளவு பேர் முகர்ந்து ரசிக்கவில்லையா?”

லோகு முதலி சுந்தரியை பார்க்கும்பொழுது பின்வருமாறு மனதில் எண்ணிக் கொள்கிறார். “அழகான பெண், அடக்கமானவள், ஏதோ கொஞ்சம் படித்தும் இருக்கிறாள். ஏழைதான், இருந்தால் என்ன? நம் வீட்டில் உலாவினாளே போதும் கிருகலட்சுமியாக இருப்பாள். நம் பையனுக்கு ஏற்ற பொருத்தமான பெண். என்ன செய்வது? அவள் ஆப்பகாரிக்கா பிறக்க வேண்டும்? அரச மரத்தை ஆறு வருஷம் சுத்தியும் பயனில்லாமல் அடுத்த தெருவில் அழுது கொண்டிருக்கிறாளே தாசில்தாரின் சம்சாரம் தில்லை, அவள் வயிற்றில் பிறந்திருக்க கூடாதா? நம் மகனுக்கு கல்யாணம் செய்து கொண்டிருக்கலாமே” என்று லோகு முதலி சொல்லவில்லை. மனதிலே இதுபோல் பலமுறை அவர் நினைத்தார்; சொல்லவில்லை வெளியே. லோகு முதலி பணம் படைத்தவர், பெண் இழந்தவர். ஒரே மகன் அவருக்கு. ஒய்யாரமான பையன். சுந்தரியிடம் மையல் அவனுக்கு.”

தனக்கு ஒரு குழந்தை இல்லை என்ற வருத்தத்தை அனுபவிக்கும் கனகசபேசனின் மன ஓட்டமாக அண்ணா இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"என் மகன் ராஜகோபால் இருக்கிறான். எனக்கென்ன கவலை!" என்று கனகு யாரிடம் கூறுவான்? எப்படிக் கூறுவான்? விஷயமே அவனுக்குத் தெரியாது? தெரிந்தாலும் கூறமுடியுமா?

தனது மாமனாரான இலுப்பைப்பட்டி மிராசுதாரர் வழக்கில் சிக்கி அவதியுறும் போது கனகு தனக்குள் எண்ணிக் கொள்கிறான்:
"உனக்கு இவ்வளவோடா நின்றுவிடும் கேடு? நீ படவேண்டியது எவ்வளவோ இருக்கிறது; உன்னுடையப் பணத்திமிரினால், எவ்வளவு ஏழைகளை கண் கலங்கச் செய்திருக்கிறாய்? அதனுடைய பலனை அடைகிறாய். என் மீது கோபித்துக் கொள்கிறாயே. உன் அட்டகாசத்தால் ஊரிலே உனக்குப் பகை. வியாஜ்யம் பிறந்ததும் உன் விரோதிகள் உன்னைத் தீர்த்துக் கட்ட வேலை செய்கிறார்கள். படு, எனக்கென்ன! நான் என்ன செய்வது? உன்னாலே நான் கெட்டேன். என்னாலே அந்தப் பெண் கெட்டுச் சீரழிந்து, எங்கோ போய்விட்டாள். உன் முகத்தைப் பார்க்கும்போதே எனக்கு வருகிற கோபம் கோடாரியையோ, அரிவாளையோ தேடச் செய்கிறது."

இப்படியாக வார்த்தைகளை நயம்பட அடுக்கிக் வாசகருக்கு அலுப்புத்தட்டாமல் பார்த்துக் கொள்கிறார். கதை ஆண் காதலித்த பெண்ணை ஏமாற்றுதல் என்ற உளுத்துப்போன கருவை கொண்டிருந்தாலும் அண்ணாதுரை கையாண்டிருக்கும் சொற்பின்வருநிலை என்னும் அணி இலக்கண உத்தி கதையை சுவாரசியம் மிகுந்ததாக மாற்றுகிறது. அதாவது, சொல்லவில்லை என்ற வார்த்தை கதை முழுவதும் மீண்டும் மீண்டும் ஒரே அர்த்தத்துடன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சொல்லவில்லை என்ற சொல்லுக்கு வேறு அர்த்தங்கள் இல்லை ஆயினும் அது ஒவ்வொரு முறை பயன்படுத்தப்படும் போதும் அதன் கனம் கூடிக்கொண்டே போகிறது. சுந்தரியின் அழகை பற்றி அவரது ஆசிரியர், ஊர் மக்கள், எவரும் வாய்திறந்து சொல்லாத போது ஏற்படுத்தாத பாரம், பதற்றம் சுந்தரி கனகு தன்னிடம் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது பற்றி தன் தாயிடம் சொல்லவில்லை என்று ஆசிரியர் சொல்லும் போது நம்மை அழுத்துகிறது. அதேபோல சுந்தரி கருவுற்றிருப்பதை தாயிடம் சொல்லாமல் மறைக்கும் போதும் நெஞ்சு பதறுகிறது. அப்படியே ஒவ்வொரு விடுபடுதலின் போதும் வாசகர்கள் வருத்தமும் கோபமும் பதற்றமும் கொள்ள நேரிடுகிறது. இறுதியாக கனகு தன்னை ஏமாற்றியதை சுந்தரி தன் மகனிடம் மறைக்கும் போது ஆசிரியர் “எப்படி சொல்ல முடியும்” என்று சொல்லி கதையை முடிக்கிறார். அந்த ஒரு பதில் உணர்ந்த வாக்கியம் பல கேள்விகளை நம் முன் நிறுத்திவிடுகிறது. அதில் மிக முக்கியமானது சுந்தரியை சொல்லவிடாமல் தடுப்பது எது என்ற கேள்விதான்.

மீண்டும் ஒருமுறை அந்த கேள்வி உங்கள் முன்னால்.

3/2/2019 அன்று வாசகசாலை தமிழ் சிறுகதை கொண்டாட்டம் நிகழ்வு 97 இல் பேசியது.